கோவை டவுன்ஹால் போத்தீஸ் துணிக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கொடூரமாகக் கிழித்துச் சேதப்படுத்தும் ‘சைக்கோ’ தனமான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வணிகப் பகுதியான டவுன்ஹால் பகுதியில், போத்தீஸ் துணிக்கடை அருகே இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், அங்கு உள்ள பார்க்கிங் ஏரியாவில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகளின் சீட்டுகளை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் வைத்து இருந்த கூர்மையான பிளேடால் ‘சரசரவென’ கிழித்து எறிந்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல அசால்ட்டாக நடந்து சென்று உள்ளார்.
பின்னர் வந்து பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது புத்தம் புதிய பைக்குகளின் சீட்டுகள் அனைத்தும் கிழிந்து பஞ்சு வெளியே வந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த ‘பிளேடு சைக்கோ’ செய்த கொடூரக் கூத்து பதிவாகி இருந்தது.
இந்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவ்வித காரணமும் இன்றிப் பொதுமக்களின் சொத்துக்களைச் சேதப்படுத்தும் இந்த வக்கிரப் புத்தி கொண்ட ‘சைக்கோ’ ஆசாமியை, போலீஸார் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பைக் உரிமையாளர்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



