• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

அப்போலோ மருத்துவமனை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 6, 2026

சென்னை அப்பல்லோ மருத்துவமனை தகவல் மையம் மற்றும் சசி சர்வேஷ் பாலி கிளினிக் இணைந்து காரைக்காலில் சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் செரிமான மண்டல நோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜ் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜய் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

முகாமில் வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள், அமிலத்தன்மை, செரிமானக் கோளாறுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும், இதய நோய்கள் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் குறித்தும் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜய் நரசிம்மன் பேசுகையில், தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். ஆரோக்கியமான உணவு முறையையும், தினசரி உடற்பயிற்சியையும் கடைபிடிப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செரிமான மண்டல நோய் நிபுணர் டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜ் கூறுகையில், நோய்கள் தீவிரமடைவதற்கு முன்பே அவற்றை கண்டறிந்து தடுக்கும் நோக்கில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். பொதுமக்களிடம் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரம்ப நிலையிலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதும் முகாமின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

மேலும், முகாமில் பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது. இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சசி சர்வேஷ் பாலிகிளினிக் உரிமையாளர் வாசுதேவன், அப்புறம் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து இருந்தனர்.