கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment), பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் கல்லூரிச் சாலை அருகே உள்ள அந்தப் பிரம்மாண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள வீடுகளில் வசிக்கும் நூற்றுக் கணக்கான சிறுவர், சிறுமியர்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்களைக் காலையில் அழைத்துச் செல்லவும், மாலையில் கொண்டு வந்து விடவும் அந்தந்தப் பள்ளிகளின் பேருந்துகள் மற்றும் வேன்கள் தினசரி அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே வந்து செல்வது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நலச் சங்க (Apartment Association) நிர்வாகத்தினர் ஒரு விசித்திரமான புதிய விதியை அறிவித்தனர்.

அதில், “கனரகப் பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்கள் தினசரி அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே வந்து செல்வதால், வளாகத்திற்குள் உள்ள தார்ச் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் (Paver Block) கற்கள் அடியோடு சேதம் அடைகின்றன. எனவே, இனிமேல் எந்தவொரு பள்ளிப் பேருந்தும், வேனும் அப்பார்ட்மெண்ட் பிரதான கேட்டைத் தாண்டி உள்ளே வரக் கூடாது,” என அதிரடியாகத் தடை விதித்து உள்ளனர்.
சங்க நிர்வாகத்தின் இந்தத் தன்னிச்சையான முடிவால், பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் அப்பார்ட்மெண்டிற்கு வெளியே சாலையிலேயே நிறுத்தப்படும் சூழல் உருவானது.
இந்த நாள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பேருந்து ஏறிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கைக் கண்டு ஆத்திரம் அடைந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் பெற்றோர், அப்பார்ட்மெண்ட் வளாகத்தில்போராட்டத்தில் குதித்தனர்.
தங்களது பள்ளிச் செல்லும் சிறு குழந்தைகளையும் கைகளில் பிடித்துக் கொண்டு, சங்க நிர்வாகிகளுக்கு எதிராகப் பெற்றோர் கொதித்தெழுந்து சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினர்.




