• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

BySeenu

Jun 5, 2026

கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் எங்கும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் கூட்டத்தில் துறைவாரியான பணிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும் நோக்கில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த 20 நாட்களில் என்ன சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கூறுங்கள், அதைப் பார்ப்போம்” என்றார். மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலைக்கு என்ன வேதனை உள்ளது என்பது குறித்து நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசுகையில், அந்தத் திட்டத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

கூட்டணி அரசியல் குறித்து கேட்கப்பட்டபோது, “கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். ஆனால் கூட்டணிக்கு எந்த பெயரும் வைக்கப்படவில்லை” என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “செந்தில் பாலாஜி குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அவர் ஏன் தொடர்ந்து அமைச்சரவையில் இருக்க முடியவில்லை என்பதற்கு அவரே பதில் சொல்ல வேண்டும். திமுகவின் முடிவுகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது” என்றார்.

இறுதியாக, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.