மதுரை மாநகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன், லாரி ஓட்டுநர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், மகேந்திரன் தனது வாகனத்தில் அமர்ந்திருந்தபோது, லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாகவும், வாகனங்களை தடுத்து நிறுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்ஷித் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், முறையற்ற வகையில் லஞ்சம் கோரியது மற்றும் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறப்பு எஸ்.ஐ. மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



