கோவை, சின்னியம்பாளையம் அடுத்த ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் வளாகத்தில், மது போதை ஆசாமிகள் நடுரோட்டில் அரங்கேற்றிய வினோத ரகளை பரபரப்பு காட்சிகள் வைரல்.

வழக்கம் போல காலை நேரத்தில் மது அருந்தக் குவிந்த போதை ‘வீரர்களுக்கு’ இடையே, திடீரென வாய் தகராறு ஏற்பட்டுப் வாக்குவாதம் வெடித்தது. போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரையொருவர் மிரட்டல் விடுத்தது சலசலப்பு நிலவியது.
இந்த மோதலின் உச்சக்கட்டமாக, போதையில் நிலைதடுமாறிய ஒரு நபர், டாஸ்மாக் அருகே கொட்டி வைக்கப்பட்டு இருந்த மணல் மேட்டின் மீது இருந்து அப்படியே தலைகுப்புறக் கீழே விழுந்து உருண்டார்.
விழுந்த வேகத்தில் போதை ஆசாமியின் ஆத்திரம் தாளாமல், அங்கு இருந்த மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் மீதும், வாரி, வாரி வீசி அதிரடி அலப்பறையில் ஈடுபட்டார்.

பார்ப்பதற்குக் காமெடியாகவும், அதே சமயம் முகம் சுளிக்கும் வகையிலும் இருந்த இந்த “மணல் யுத்தத்தை” அங்கு இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்தார்.
தற்போது இந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனங்களையும், கிண்டல்களையும் பெற்று வருகிறது.




