சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியதற்காக உதயநிதிக்கு நல்ல புத்தி கோரி தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டது.

சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உதயநிதிக்கு நல்ல புத்தி கோரி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தார். அப்பொழுது பேசியவர்;

தமிழகம் என்றைக்குமே ஆன்மீகத்தின் பக்கம் தான். தமிழர்கள் சனாதான இந்து தர்மத்தை பின்பற்றினார்கள். சனாதானம் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது சனாதனம். அந்தக் கொள்கையை ஏற்றவர் அண்ணாதுரை, துர்கா ஸ்டாலின் சனாதான கொள்கையை தான் பின்பற்றுகிறார். ஆனால் உதயநிதி இந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார். உதயநிதியின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை, தான் பெருமைமிகு கிறிஸ்தவன் என்று உதயநிதி கூறினார். கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களில் ஜாதி பிரிவினை இல்லையா ? அதை ஒழிப்பேன் என்று உதயநிதி சொல்ல முடியுமா ? அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் என்று காட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய் இதை கண்டித்து இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் நிர்வாகிகளும் சமாதான தர்மத்தை ஒழிப்பேன் என்கிறார்கள். அவர்கள் வன்மத்துடன் செயல்படுகிறார்கள். அதற்கு விஜய் பழியாகி விடக் கூடாது இதை தமிழ் மண் மன்னிக்காது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.




