விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மை தவறாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகிறது…

சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மகுமார்( வயது 39 ). இவர் சிவகாசியிலுள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்காக ரூபாய் 50- ஆயிரம் ரொக்கப் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கக் கவரில் வைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பணம் தவறி சாலையில் விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் பத்மகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டார்.
அப்போது அந்தப் பக்கமாக சிவகாசி மருதுபாண்டியர் மடத்து தெருவில் வசிக்கும் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனையாளர் முத்துராஜ்( வயது 24 ) தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் கிடந்த ரூபாய் 50- ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கண்டெடுத்து உடனடியாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையே பணத்தைத் தவற விட்ட பத்மகுமார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய வந்தார். ஏற்கனவே சாலையில் கிடந்து மீட்கப்பட்ட ரூபாய் 50- ஆயிரம் ரொக்கப் பணம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போலீசர்கள் அந்தப் பணம் பத்மகுமார் தவறவிட்ட பணம் என்பதை உறுதி செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.

சாலையில் கிடந்த 50- ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர் முத்துராஜீன் நேர்மையைப் பாராட்டி காவல்துறையினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.



