புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்தல் நாளில் 23.04.2026 இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. ஜியாராஜ் என்கிற கார்த்திகேயன் யோக சக்தி என்கிற நிவேதா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது.

அதேபோல் அதேபோல புதுக்கோட்டை சேர்ந்த பிரபு சோலைமலர் தம்பதியினருக்கும் திருமணம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேதியில் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது தேர்தல் ஆணையம் இந்த தேதியை அறிவித்தது மார்ச் கடைசி வாரத்தில் தான்.
ஆனால் இந்த தேதியில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்று உற்றார் உறவினர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே நிச்சயம் செய்து விட்டோம். திருமணம் முடித்த கையோடு அவரவருக்கு உரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியதும் எங்களது கடமை என்று தெரிவித்தனர்.

அதன்படியே அவரவர்களுக்கு உரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து ஜனநாயக கடமையும் ஆற்றினர். ( சோலை மலர் வாக்களித்த வீடியோ இணைப்பும் உள்ளது.)
இந்த திருமணம் குறித்து மணமகன் ஜியாராஜ் அவர்களின் உறவினரான சீனிவாசன் என்பவர் கூறுகையில்,
இன்று தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. இது ஒரு அருமையான நாள். அனைவரும் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய வகையில் வாக்களிக்க சென்று இருக்கிறார்கள். பரபரப்பாக அனைவரும் இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது மக்கள் ஜனநாயகத்தின் மீது எவ்வளவு அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வருகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் திருமண தேதியை உற்றார் உறவினர்கள் ஏற்கனவே நிர்ணயித்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் அதன் பிறகு தான் இந்த தேதியை உறுதிப்படுத்தியது. அதற்காக திருமண செய்தியை மாற்ற முடியாது. இன்று திருமணம் முடித்த கையோடு உறவினர்களின் எத்தனை அழைப்புகள் இருந்தாலும் அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயக கடமையாற்றுவது எங்களது உரிமை மட்டுமல்ல கடமையுமாகும் என்று கூறி அவர்கள் வாக்களிக்க தயாராகி வாக்குச்சாவடிக்குச் சென்று இருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக அந்த புதுமண தம்பதியினரை பாராட்டுவதோடு வாழ்த்துகிறோம் என்றார்.
மணமக்கள் பிரபு சோலைமலர் தம்பதியினர் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களிக்க சென்ற போது அங்கு உள்ள தேர்தல் அலுவலர்கள் காவல்துறையினர் போன்றோரெல்லாம் விருப்பப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வாக்குச்சாவடியில் உள்ள அனைவரும் இந்த தம்பதியை வாழ்த்தினர். சோலைமலர் மட்டும் அங்கு. பிரபுவுக்கு வேறொரு வாக்குச்சாவடி என்பதால் அங்கிருந்து அந்த வாக்குச்சாவடியை நோக்கி பயணித்தனர். அதேபோல் ஜியாராஜ் தம்பதியினர் அவரவர்களுக்கு உரிய வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




