திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்:
நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியின் பலம் நேர்மையும், எளிமையும் தான். ராஜீவ் காந்தி மறைந்த போதும், 2004 தேர்தல் வெற்றியின் போதும் சோனியா காந்தி அவர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதை அவர் மறுத்துவிட்டது. உருட்டி, மிரட்டி அரசியல் செய்வது நமது DNA வில் இல்லை.

கூட்டணியில் கேட்டது ஒண்ணு, கிடைச்சது ஒண்ணு. பொதுத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை நிறுத்தி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் தான். வேறு எந்த கட்சிக்கும் இதற்கு தெம்பும், திராணியும் இல்லை. 22 ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி என்ன கிடைத்தது என்று கணக்கு பார்த்தால் சிக்கலாக தான் இருக்கும்.
கோட்சேவின் வாரிசுகள், அமித்ஷாவின் வளர்ப்புகள் பாஜகவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளது. பழனிசாமி அவர்களை வைத்து அதிமுக ஆட்சி அதிகார பங்கு கேட்க போகிறார்கள்.
அமமுக, பாமக போன்ற கட்சிகளை ஈடி, வருமான வரித்துறை, சிபிஐ வைத்து அதிமுக தலைமையில் கூட்டணிக்கு சேர்த்து கொண்டது பாஜக.
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரச்சனை இல்லாத பிரச்சனையாக்க பார்த்தார்கள். ஏற்கனவே தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் தர்கா முன்பு தீபம் ஏற்ற நினைத்தார்கள். முருகனை மதிக்கும் அளவிற்கு மத நல்லிணக்கத்தையும் நம்புகிறோம். திருப்பரங்குன்றம் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை வேற, பழனிச்சாமியின் நிலை வேற.
பாஜக கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றுவிடக்கூடாது. அதற்காக தான் நாம் இங்கே வெற்றி பெற வேண்டும். கூட்டணி யாரோடு இருந்தாலும் நமது லட்சியம் பாஜக உள்ளே வரக்கூடாது என்பதுதான்.
நம்மை அழைக்கவில்லை, நமக்கு மரியாதை இல்லை என்பதை 20 நாட்களுக்கு தள்ளி வைத்துவிடுங்கள்.
நிர்வாகிகள் அனைவரும் கனத்த இணையத்துடன் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் நமது நோக்கம் பாஜகவும், அதிமுகவும் மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற கூடாது என்பது தான். நம்முடைய 23ம் தேதி மாலை 6 மணி வரை நமது பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும் நமது லட்சியத்தில் தடம் புரளாது. திருப்பரங்குன்றம் கூட்டத்தில் நான் பேசியதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் பாஜக தமிழகத்தில் வரக்கூடாது என்பதற்காக அனைவரும் பெரிய மனது வைத்து திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.



