புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் கல்வியில் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் இந்த கல்லூரி.

இந்த கல்லூரி மாணவியர் இங்கு கல்வி கற்கும் போது கல்வியோடு பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டு வெளியில் வருகிறார்கள் என்பது கடந்த கால வரலாறு. அந்த வகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிலும் மாணவியர் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடத்தப்படும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளையும் கற்று வருகிறார்கள். தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையை சேர்ந்த புகழேந்தன் இவர்களுக்கு நடன கலை பயிற்சி அளித்து வருகிறார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்த மாணவியரின் முதல் கலை பயிற்சி அறிமுகமும் நடைபெற்றது. அதில் இரண்டு நாட்டுப்புறப் பாடல்களுக்கு போராட்டம் அடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் நடனமாடினர்.
பயிற்சியாளர் புகழேந்தன் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். நேரு யுவகேந்திராவின் மை பாரத் நிகழ்வு மேற்பார்வையாளர் நமச்சிவாயம் அனைவரையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்.



