மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதாக கூறி ஜல்லி கற்களை கொட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காததால் அந்தப் பகுதி பொதுமக்கள் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் ஆனால் ஏதேதோ காரணம் கூறி ஒப்பந்ததாரர் சாலை அமைக்கும் பணிகளை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் திருமங்கலம் செல்லும் மெயின் சாலையில் திடீர் சாலை மறியல் செய்ய முடிவு செய்து ரோட்டில் அமர்ந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஒப்பந்ததாரர் ஒரு வாரத்தில் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்காத பொதுமக்கள் இதே போல் மூன்று முறை ஒப்பந்ததாரர் கூறி விட்டுச் சென்றதாக கூறி சாலை மறியல் செய்ய மீண்டும் முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அனுமதியின்றி சாலை மறியல் செய்தால் கைது செய்ய நேரிடும் என பொதுமக்களை எச்சரித்தனர்.
மேலும் ஒப்பந்ததாரிடமும் உடனடியாக சாலை அமைத்து தர போலீசார் அறிவுறுத்தினர் மேலும் ஒரு வாரத்தில் சாலை அமைக்காத பட்சத்தில் ஒப்பந்ததாரர் மீது பொதுமக்கள் சார்பில் காவல் துறையில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் காவல்துறையினர் கூறினர். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர். இதே போல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஜல்லி கற்களை கொட்டிசென்று சாலை அமைக்காமல் சென்றுள்ளதாகவும் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



