மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பையா, மேலமாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தின் மகன் கருப்பையா, ஊரில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான இடத்தை வாங்க முயன்றதாகவும், அந்த நபர் சம்மதிக்காத நிலையில் அதே இடத்தை வேறு ஒருவருக்கு விற்றதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில், அந்த இடத்தை வாங்கிய பெண்ணின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், சம்பந்தப்பட்டவர்மீது வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த குற்றச்சாட்டுக்குட்பட்டவர், தன்னுடைய உறவினரின் காலி இடத்தில் தீ வைத்து, இடம் வாங்கியவர்களே தீ வைத்து தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக பொய்யான புகார் அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், ஊர் பொதுமக்களிடையே பிரச்சனை உருவாக்கும் வகையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், சமூக அமைதியை குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் சம்பந்தப்பட்டவர்மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







