மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு தனது வீட்டின் எதிரில் கட்டி வைப்பது வழக்கம். இவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கன்று குட்டி ஈன்ற நிலையில் வீட்டின் எதிரில் கட்டி வைத்து தினசரி அதற்கு தேவையான உணவுகளை வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் வீட்டின் எதிர்ப்புறம் அந்த பகுதிக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மின்சார ட்ரான்ஸ்பார்மர் ஒன்று இருந்து வருகிறது இந்த மின்சார ட்ரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மின் கம்பங்களில் அடிக்கடி மின்சார எர்த் இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு புகார் அளித்து வந்துள்ளனர்
மேலும் அருகில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் உள்ளதால் மின்சார ட்ரான்ஸ்பார்மரால் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் காளியம்மாள் தனது பசு மாட்டினை இன்று மதியம் தனது வீட்டின் எதிர்ப்புறம் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் அருகில் கட்டி வைத்து அதற்கு உணவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது அப்போது அருகில் இருந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரில் இருந்த மின்சாரம் பசு மாட்டின் மீது பாய்ந்து சம்பவ இடத்தில் பசுமாடு உயிரிழந்துள்ளது
தனது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருந்த பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை நேரில் பார்த்த காளியம்மாள் செய்வதறியாத திகைத்து தரையில் விழுந்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பசு மாடு கன்று குட்டிஈன்ன்ற ஒரு மாதத்தில் உயிரிழந்த சம்பவத்தால் காளியம்மாவின் குடும்பம் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தது.

மேலும் ஒரு மாத கன்று குட்டி தனது தாய் இறந்த நிலையில் அனாதையாக நின்றிருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
ஆபத்தான நிலையில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைத்து இருந்தால் குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கி இருந்த பசுமாடு உயிரிழந்திருக்காது.
மேலும் ஒரு வாரத்தில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ள நிலையில் அதிகளவு பொதுமக்கள் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







