சென்னை அடுத்த தாம்பரம் எம்.சி.சி. கேம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் ‘ஸ்பெக்ட்ரா 2026’ ஆண்டிற்கான ஸ்டெம் கண்காட்சி திறப்பு விழா மற்றும் திட்ட நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் டாக்டர் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் சபையன் பால் மற்றும் துணை முதல்வர் ஜெஸ்டீன் ஜெபா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டி.ஆர்.டி.ஓ தொழில் கல்வி ராமானுஜன் சிறப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் ராஜா சிங் தங்கதுரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார்.

அதன்போது, உலகின் அதிநவீன ஏவுகனைகளில் ஒன்றான பிரம்மோஸ் ஏவுகனையின் செயல்திறன் மற்றும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து காணொளி காட்சியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கமாக பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘ஸ்பெக்ட்ரா 2026’ ஸ்டெம் கண்காட்சியை திறந்து வைத்த டாக்டர் ராஜா சிங் தங்கதுரை, மாணவர்கள் தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளை பார்வையிட்டு, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைத்திறனை பாராட்டி வாழ்த்தினார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதுமை திறனை வளர்க்கும் இந்த வகை ஸ்டெம் கண்காட்சிகள், எதிர்கால விஞ்ஞானிகள் உருவாகுவதற்கான முக்கியமான தளமாக அமைவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.







