கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா இன்று கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது.

1970-ம் ஆண்டு மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடு அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வறக்கட்டளையின் கீழ் தற்போது மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த 18 நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
விழாவிற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து வரவேற்புரை வழங்கினார். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தங்களது ஆண்டறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 30 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் 400-க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்த டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்தி அவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஏ. வேலுமணி, ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு அதன் மீதான சமூகத்தின் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையுமே காரணம் என்றும், வாழ்வில் முன்னேறத் துணிச்சலான முடிவுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஒரு ஆண் வெற்றி பெற்றால் குடும்பம் வளரும், ஆனால் ஒரு பெண் வெற்றி பெற்றால் இந்தச் சமூகமே வளரும் என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்விழாவில் இணை நிர்வாக அறங்காவலர் திரு. நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் திரு. ராமகிருஷ்ணா விஜயகுமார், திரு. லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி திரு. சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு. டி. மகேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.எல். சிவக்குமார் நன்றியுரை வழங்கினார்.







