அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அடுத்த கு.வல்லம் கிராமத்தில், 1985-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசால் முந்திரிக்கொட்டை சேகரிப்போர் தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.

இச்சங்கத்தின் கீழ் முந்திரி சாகுபடி செய்யப்பட்ட 73.50 ஹெக்டர் நிலம் அச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடனை காரணம் காட்டி, இச்சங்கத்தை கூட்டுறவுத்துறை கலைந்துள்ளது. மேலும், முந்திரி காடுகளை தனி நபர்களுக்கு ஏலத்தில் விட்டு வருகிறது. எனவே, தனிநபர்களுக்கு முந்திரிகாடுகளை ஏலத்தில் விடுவதை நிறுத்த வேண்டும். மீண்டும் முந்திரிக்கொட்டை சேகரிப்போர் தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தினை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி அச்சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க உறுப்பினர் அம்சாயாள் கண்ணையன் தலைமை வகித்தார். தமிழர் நீதிக்கட்சி மாநில மகளிர் அணித் தலைவி கவியரசி இளவரசன், தமிழர் நீதிக்கட்சி நிறுவனர், ஏர் உழவர் சங்கத்தின் மாநில தலைவர் சுபா.இளவரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முடிவில் சங்கத்தின் நிர்வாகி அருள் ராஜ்குமார் நன்றி கூறினார்.






