திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கியதால் ஆத்திரத்தில் கீழே கிடந்த கம்பியை எடுத்து கணவனின் பின்னந்தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து கணவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருநகர் பெரியார் தெருவில் வசித்து வரும் பாண்டியராஜன்(40)
விஜயலட்சுமி (30)தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.பாண்டியராஜன் பூ மற்றும் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பாண்டியராஜன் வீட்டில் இருந்த மனைவி விஜயலட்சுமியுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பாண்டியராஜன் மனைவியை அடித்து கீழே தள்ளியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமுற்ற விஜயலட்சுமி கீழே கிடந்த இரும்புகம்பியை எடுத்து பாண்டியராஜனின் பின்னந்தலையில் பலமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பாண்டியராஜன் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.சம்பவம் தொடர்பாக திருநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு இறந்த பாண்டியராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




