மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பதாக அமச்சியாபுரம் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சொந்தமாக ஊரின் முன்பாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது அதில் மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளனர். இது சம்பந்தமாக வீடியோ பதிவும் தற்போது வெளியாகி உள்ளது இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படா வண்ணம் உடனடியாக மருத்துவ குழுவை அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் குடிநீர் தொட்டியை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மலம் கலந்த தண்ணீரால் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பயன்படுத்தாமல் சமையல் செய்யாமல் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் நேற்று காலை தண்ணீர் பிடிக்கும் போது குடிநீர் வாடை வந்ததாகவும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பது போல் தோன்றியதாகவும் கூறி சந்தேகத்தின் பேரில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்த போது அங்கே மலம் கலந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் இடம் தகவல் தெரிவித்தும் தற்போது வரை குடிநீர் தொட்டியை பார்வையிடவோ சுத்தம் செய்யவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

மேலும் இரண்டு நாட்களாக குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேல்நிலை தொட்டியை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று நோய் பரவாத வண்ணம் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.