அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 27.09.2024 அன்று செந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருட்டில் ஈடுபட்ட எதிரி A2 கிருஷ்ணமூர்த்தி-யை செந்துறை காவல்துறையினர் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான எதிரி A1 ராஜதுரை @ ரமணா @ ராமர் 52/25, த/பெ பழனியாண்டி,சொக்கலிங்கபும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட குற்ற பதிவு கூடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன்(அரியலூர் உட்கோட்டம் பொறுப்பு) தலைமையில், கயர்லாபாத் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் குற்றவாளியை விரைவில் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் இராஜவேலு தலைமையிலான காவலர்கள் 02.10.2025 நேற்று எதிரி A1 ராஜதுரை-ஐ கைது செய்தனர். மேலும் எதிரியிடம் இருந்து 228 கிராம் (28 1/2 சவரன்) தங்க கட்டிகள், 1 லட்சம் ரூபாய் பணம், மற்றும் இருசக்கர வாகனம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் எதிரி ராஜதுரை குவாகம் காவல் நிலையத்தில் 2 திருட்டு சம்பவத்திலும், கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் 1 திருட்டு சம்பவத்திலும், அரியலூர் காவல் நிலையத்தில் 1 திருட்டு சம்பவத்திலும், கயர்லாபாத் காவல் நிலையத்தில் 1 திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் மதுரை, மதுரை நகரம், கோயம்புத்தூர், ஈரோடு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ராஜதுரை மீது திருட்டு வழக்குகள் உள்ளது. அதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர், எதிரி ராஜதுரை-ஐ நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்கள்.

திறம்பட செயல்பட்டு திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜதுரை-யை , கைது செய்த காவல் ஆய்வாளர் குணசேகரன் , காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜவேல் மற்றும் சரத்குமார், தலைமை காவலர்கள் அருள் மணிகண்டன், மற்றும்.வேல்முருகன், முதன்மை காவலர் செந்தில் முருகன், காவலர்கள் வினோத்குமார், வெற்றிச்செல்வன், ராஜேந்திரன் ஆகியோரை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் பாராட்டினார்.