திருச்சி திருவெறும்பூர் அருகே மாநகராட்சியின் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்த 2 பேர் பாதாள சாக்கடை அடைப்பை எடுத்த பொழுது விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதாள சாக்கடை அடைப்பை எடுப்பதற்காக திருச்சி மாநகராட்சியில் சுப்பையா என்பவர் காண்ட்ராக்ட் டில் 3 வருடங்களாக வேலை பார்த்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பூரை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் ரவி வயது (38) சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு (32)ஆகிய இருவரும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்பொழுது
சம்பவ இடத்தில் திருச்சி மாநகராட்சி ஜே.இ பிரசாந்த் மற்றும் ஏ.இ ஜெகஜீவநாதன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடைக்குள் விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷ வாய்வு தாக்கி இறந்த ரவி மற்றும் பிரபு ஆகிய இருவரின் உடலை பாதால சாக்கடையில் இருந்து மீட்டெடுத்தனர்.
பின்னர் அவர்கள் இருவரது உடலையும் திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.