• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அருவிகளில் எட்டாவது நாளாக குளிக்க தடை..,

ByV. Ramachandran

Jul 26, 2025

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான குற்றாலம் சீசன் தற்போது களைகட்டி உள்ளது. கடந்த சில நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கண மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது . மேலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். வெள்ளம் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை அறிவித்துள்ளது.