ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுதுள்ளது.
இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..,
வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 – 3 முறை வாட்டர் பெல் அடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஜூலை மாதம் முதல் நாள் ஒன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது என்றும், மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ‘வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் நேற்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை முதல் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்
