விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் வைகாசி ப்ரமோற்சவ விழா கடந்த மே 27ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கியா நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் விஷ்வநாத சுவாமியும் விசாலட்சியும் எழுந்தருள ஏராளாமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வந்தடையும் தருவாயில் பக்தர்கள் தேரை இழுக்காமல் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக தேர் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது வடக்கு வாசலை திறப்பதற்காக வடக்கு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் கோவிலின் பிரதான வாசல் முன்பாக திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர் திறந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் மழை வெயிலில் நனைந்து தேர் பழுதடைந்து வருவதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதன் காரணமாக இன்றைய தேரோட்டம் நிறைவு பெற்றதும் இன்று முதல் மீண்டும் தேரை
வடக்கு வாசலில் நிலை நிறுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு ஒரு தரப்பு பக்தர்கள் ஆதரவும் மற்றொரு தரப்பு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தேரை வடக்கு வாசலில் நிறுத்தினால் மீண்டும் வடக்கு வாசல் மூடப்படும் என குற்றச்சாட்டிய பக்தர்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக தேர் கோவில் நுழைவு வாயில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்து அறநிலைய துறை, வருவாய் துறை, திருப்பணி குழு, பக்தர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி தேரை நிரந்தரமாக எங்கு நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.