பல்லடம் அருகே இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்ட தந்தை, நீரின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல், வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வாய்க்காலில் அடித்துச் சென்ற சேகரின் உடலை பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் கோவையில் இருந்து பொங்கலூரில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் மற்றும் விகாஸ் ஆகியோருடன் சேகர் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சசிதரன் மற்றும் விகாசை வாய்க்காலில் அடித்து சென்றது. அப்போது இரண்டு சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அம்மா அனிதா அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். இதனை தொடர்ந்து வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்களையும் சேகர் காப்பாற்றி விட்டு நீரின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவிநாசிபாளையம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . அப்போது நிலைய அலுவலர் முத்துக்குமாரசுவாமி தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சேகரை தற்பொழுது வரை தேடி வருகின்றனர்.




