பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து, முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது.
போலீஸார் அனுமதி தராத நிலையில் 2 மணி நேரம் போராட்டத்தினால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்..,
தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
அந்த பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைக்கும் சென்ற 3 ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் உண்மை நிலையை அறியாமலேயே முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடத்தியுள்ளார் என கூறினார்.

ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆனந்த், பாலா, சம்பத் ஆகிய 3 பேர் மது அருந்தி விட்டு அப்பகுதியில் வந்த சுற்றுலா பயணிகளை மிரட்டி தாக்கியதுடன் போலீசாரையும் மிரட்டியதால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக தான் முன்னாள் முதல் அமைச்சர், எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் பொதுமக்களுக்கு இடையூறு தந்து போராடியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது என சபாநாயகர் தெரிவித்தார்.
இடையூறு ஏற்படும் போராட்டத்தை காவல்துறை வேடிக்கை பார்க்கக் கூடாது. சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கவர்னர், முதல் அமைச்சர், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன். முதல் அமைச்சர் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அதனால் இதுபோன்ற விசயங்களில் நிதானமாக செயல்படுவார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களையும், அரசியல் நாடகத்துக்கான போராட்டங்களையும் இனியும் போலீஸார் வேடிக்கை பார்க்கக் கூடாது என சபாநாயகர் வலியுறுத்தினார்.



