உசிலம்பட்டி அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்ட ஊராட்சி செயலர் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி, ஊராட்சி செயலரை மாற்ற கோரி கிராம மக்கள் புகார் அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாரி கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் முணியாண்டி., இவர் தற்போது தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் போலியான வீட்டு வரி ரசீது வழங்கி வரி வசூல் செய்து வருவதாகவும், இதனால் பெரும்பாலான வீடுகள் வரி கட்டவில்லை என கிராமத்தின் நலத்திட்ட பணிகளும் பெருமளவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அனைக்கரைப்பட்டி மற்றும் வண்டாரி கிராம மக்கள், இந்த ஊராட்சி செயலர் முணியாண்டியை பணியிடை மாற்றம் செய்ய கோரி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டதில் குடிசேரி கிராம ஊராட்சிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்த போதும் முணியாண்டி மாறுதலாகி செல்லாமல் வண்டாரி கிராமத்திலேயே பணிகளை தொடர்வதாகவும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயன்பெற பணம் கொடுத்த மக்கள் சென்று கேட்கும் போது முறையான பதில் அளிக்க மறுப்பதாகவும், குற்றம் சாட்டி இன்று சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் – இடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் – மதுரை மாவட்ட ஆட்சியரின் கவணத்திற்கு கொண்டு சென்று இம் மாத இறுதிக்குள் பணிமாறுதல் செய்வதோடு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவித்தனர்.








