உசிலம்பட்டி அருகே போலியான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகி மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராம நிர்வாக அலுவலர் கவாஸ்கர் என்பவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ஆதிசேடன் என்ற அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர், கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் லெட்சுமி என்பவரும், பாப்பம்பட்டியில் வசிக்கும் புஷ்பம் என்பவரும் ஒருவரே என்ற ஒற்றைச் சான்று வழங்க கோரியுள்ளார்.

இந்த ஒற்றை சான்று வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என கூறிய விஏஓ-வை போலியான சான்று வழங்க கோரி, தாக்க முற்பட்டு கொலை மிரட்டல் விடுத்தாக, வீடியோ ஆதாரத்துடன் விஏஒ கவாஸ்கர் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இந்த வீடியோவும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில்., இந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகி ஆதிசேடன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட *296 (b), 132, 351(2)* 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






