மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்று
தொடங்குகின்றன.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் இந்த தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) தொடங்குகின்றன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும். இன்று 10-ம் வகுப்பிற்கு ஆங்கிலம் பாடத் தேர்வும் 12- ம் வகுப்பிற்கு தொழில் முனைவு தேர்வும் நடைபெறுகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 பேர் எழுத உள்ளனர். அதேபோல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரத்து 165 பேர் என மொத்தமாக 42 லட்சத்து 237 பேர் எழுத உள்ளனர். இந்தியா முழுவதும் 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக உதவி கண்காணிப்பாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



