• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார்: கலெக்டர் மீது புகார்

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அதிமுக மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில்,” மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம். மதுரை திருப்பரங்குன்றத்தில் சில நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சினையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவராகிய தாங்கள் ஒரு அறிக்கை 05-02-2025 அன்று வெளியிட்டு உள்ளீர்கள்.

அந்த அறிக்கையில், திருமங்கலம் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் அதிமுக. பிரதிநிதி மட்டும் கையொப்பம் இடமறுப்பு தெரிவித்து சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரான மாவட்டக் கழகச் செயலாளர் என்ற முறையில் எனக்கும் (ராஜன் செல்லப்பா), மற்ற மக்கள் பிரதிநிதிகளான மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மாவட்டக் கழகச் செயலாளர் செல்லூர் கே. ராஜூ அவர்களுக்கும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரான மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவலை தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் அதிமுக சார்ந்த மற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் யாருக்கும் அமைதிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்காததால் நாங்கள் செல்லாத கூட்டத்தில், கையெழுத்து இடாமல் வெளியேறினோம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுவது எப்படி ஏற்புடையதாகும் என்ற கேள்வியை முன்வைக்க விழைகிறோம். சட்டம் ஒழுங்கு சம்பந்தமான மக்கள் பிரச்சினைகளுக்கு அதிமுக மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்காமல் அமைதிக்கூட்டத்தை நடத்தியதோடு அல்லாமல், உண்மைக்கு புறம்பான தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அதிமுக சாதி, மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். அதன் மீது வீண்பழி சுமத்த வேண்டும் என்ற முயற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பலியாகிவிட்டாரோ என்று கருத வேண்டியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாகவும், இன்றைய பிரதான எதிர்க்கட்சியாகவும் உள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுக்காமல் அமைதிக்கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டதாகவும், கையெழுத்துபோட மறுத்துவிட்டதாகவும், உண்மைக்குப் புறம்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தாங்கள் வெளிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.