கோவையில் மதநல்லிணக்க பொங்கல் விழா பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இதில் அனைத்து சமய மக்கள் பங்கேற்றனர்.
கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து பொங்கலோ பொங்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் ஆதின வளாகத்தில் இந்து,இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்த சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் மற்றும் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளாருடன் இணைந்து கிறிஸ்தவ,சீக்கிய மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேரூர் தமிழ்கல்லூரியில் பொங்கல் பானை வைத்து அனைத்து மத தலைவர்களும் பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக வாழ்த்தினர். பின்னர் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில்,கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அனைவரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை,ஏழை பெண்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.