உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத். இன்று தனது சொந்த வேலைக்காக தேனிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி அருகே மாதரை எனும் இடத்தில் முன்புறம் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த கார் மோதியது, இதில் நிலை தடுமாறி லாரியில் மோதி இவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த விஸ்வநாத்-யை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரை மாநகராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.