• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த ஸார் யார்?- இபிஎஸ் கேள்வி

ByP.Kavitha Kumar

Dec 30, 2024

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர்(ஸார்) யார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நீதி கேட்டும், அதிமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர், போதைப்பொருள் மாஃபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.