• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிகாலையில் நடந்த பயங்கரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பக்தர்கள் பலி

ByP.Kavitha Kumar

Dec 25, 2024

சாலையோரம் நின்ற கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவரது நண்பர்கள் விஜயகுமார் (38), விக்னேஷ் (31), மகேஷ் குமார் (35), ராஜ்குமார் (35) . இவர்கள் ஐந்து பேரும் முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இவர்கள் கடந்த இரண்டு நாடகளுக்கு முன்பு அறுபடை கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய காரில் புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று காலை சுவாமி மலைக்கு சென்ற அவர்கள், அங்கு தரிசனம் முடித்துவிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது காரை செல்வராஜ் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மேலக்கரந்தை அருகே வந்தபோது, செல்வராஜ் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தண்ணீர் அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகேஷ் குமார், ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.