• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!

நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார்.

நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல் 4 இரு சக்கர வாகனங்கள், ஒரு காரை இடித்தபடி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்றனர். காவல்துறையினர் தொடர்ந்து சென்றதால் கண்டெய்னரில் உள்ளவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல்கட்ட தகவலின் படி கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், சொகுசு கார் ஒன்றும் இருந்தது. கேரளா மாநிலம் திருசூரில் ஏடிஎம்மில் இருந்து ரூ.66 லட்சம் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றதாகவும் தகவல் வெளியானது.

இச்சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில், அவர்கள் இருவரையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் இன்று (அக்.02) பகல் 1 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். அதனுடன், அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார்.

இதனையடுத்து, காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், நாமக்கல்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் மற்றும் 3 துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார்.

தொடர்ந்து, காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.” இவ்வாறு சங்கர் ஜிவால் தெரிவித்தார்.