• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியை குப்பை இல்லா குமரியாக மாற்றும் முயற்சி

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் கலப்பதை நவீன தொழில்நுட்பம் மூலம் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரபல அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் மாரிமுத்து, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ஜோஸ்லின்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் இக்பால், ஆட்லின் சுகாதார அலுவலர் முருகன் கடை வியாபாரிகள் டி.மைக்கேல்ராஜ், சமீன், ஜாண்சன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களில் கடல்நீரில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மீன்வளம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சேரும் குப்பைகளை அங்கேயே மறுசுழற்சி செய்யும் பொருட்டு நவீன தொழில்நுட்ப உதவிகள் மூலம் கியாஸ் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் கடற்கரைப் பகுதிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாக்கப்படும் என்றார் அவர். முன்னதாக, கன்னியாகுமரி ரட்சகர் தெரு, காந்தி, காமராஜ் மண்டபங்களின் பின்பகுதியில் கழிவுநீர் கடலில் கலக்கும் கடற்கரைப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.