தமிழ்நாட்டில் கொரோனாவால் 36,220 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவை அரசு பேரிடராக அறிவித்து. 500 நாட்களுக்கும் மேலாகியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. எனவே இதை உடனே வழங்கக் கோரி விஜய கோபால் என்பவர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விதிகளின்படி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதித்து 36,220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.