• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை

BySeenu

Feb 28, 2024

திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு “மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை” கொடுத்து அனைவரையும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள்

கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு விட்டு செல்கின்றனர்.

இதனிடையே ஆண்டு தோறும் வெகு விமர்சியாக நடைபெறும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து,தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர்.

இந்த தேர் திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பணக்கார வீதி அத்தர் ஜாமத் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.