நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக்குழு, தேர்தல் விளம்பரக்குழு என 4 குழுக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
தொகுதிப் பங்கீட்டுக் குழு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், முனைவர் வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுலஇந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் ப. தனபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் விளம்பரக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரஹீம், ராஜலெட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பரமசிவம், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, ராஜ் சத்யன், மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே திமுக, மதிமுக தனது தேர்தல் அறிக்கை மற்றும் பேச்சுவார்த்தை குழுவை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.