தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தூத்துக்குடியில் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
“கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதனப் பொருள்களை கவனத்துடன் கையாள வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல், நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.