ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்பட்டார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டார்.
இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு, வருகிற 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடக்கிறது.
அக்டோபர் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். அங்கு நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 1 – 2 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
இந்த பயணத்தையொட்டி, பிரதமர் மோடி நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், கொரோனா பரவலுக்கு பிறகு, நேரடியாக நடக்கும் முதலாவது மாநாடு இதுதான். கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பொருளாதாரத்தை மீள செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. வாடிகனில் போப் ஆண்டவரை சந்திக்கிறேன். இங்கிலாந்தில் நடக்கும் பருவநிலை மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் சாதனை பட்டியலை எடுத்துரைப்பேன்.