கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது, தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூர் அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிங்கப்பூர் சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதால், அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வு வருகிற 27-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.