• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம்.., நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் புகார் மனு…

ByKalamegam Viswanathan

Jul 20, 2023

மதுரை விளாங்குடி 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த அங்கன்வாடியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம் புதியகட்டிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி மையம் எப்படி கட்டப்பட்டது எனவும் ஆய்வு செய்த அதிகாரிகள் இதை பார்வையிட வில்லையா? என திறப்புவிழாவின் போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ட்ரான்ஸ்ஃபார்மர் அருகில் அங்கன்வாடிமையம் அமைந்தால் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டு அதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும்போது இந்த அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என பல்வேறு கேள்விகள் அப்போதே கேட்கப்பட்டது.

கடந்த ஆண்டு வார்டு கவுன்சிலரிடம் அங்கன்வாடியின் முன்பு பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மரை வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வலியுறுத்துவதாக கூறினார். ஆனால் டிரான்ஸ்பார்மரை மாற்றுவது என்பது முடியாத காரியம் என்றும் அதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டு அதன்பின் தான் மாற்றி அமைக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் இரும்பு கம்பியால் வேலி மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை. அந்த அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே உள்ளது. அதனால் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டால் அவ்வழியாக குழந்தைகள் எப்படி வெளியே வர முடியும்? ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வரும்போது ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். அங்கன்வாடியில் உள்ள பணியாளர்களும் ஒருவித அச்சத்துடனே குழந்தைகளுக்கு பாடம் நடத்துகின்றார்.

எனவே குழந்தைகளின் நலன் கருதி டிரான்ஸ்பார்மர் வேறாெரு இடத்திற்கு மாற்றி அமைத்து பெற்றோர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதிவாழ் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.