நற்றிணைப் பாடல் 172:
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
பாடல்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: நெய்தல்
பாடலின் பொருள்:
தோழியருடன் விளையாடும்போது மணலுக்குள் புன்னங்கொட்டையை மறைத்து விளையாடினோம். அதனை எடுக்காமல் மறந்துவிட்டுச் சென்றுவிட்டோம். அது முளைத்துக்கொண்டது. அது உனக்கு நுவ்வை (உன்னுடன் பிறந்தவள்) ஆகும் என்று தாய் சொல்லிவிட்டாள். எனவே எனக்கு உண்ணக் கொடுத்த பாலை அதற்கு ஊற்றி வளர்த்துவந்தேன். இப்போது அது மரமாக நிற்கிறது. கொண்க! அதன் கீழ் உன்னோடு சிரித்துக்கொண்டு விளையாட வெட்கமாக இருக்கிறது. (என் உடன்பிறந்தவள் பார்த்துக்கொண்டிருக்கும்போது உன்னோடு எப்படி உறவாட முடியும்?) உயர்ந்த இதன் நிழலில் பிறவும் பார்த்துக்கொண்டிருக்கும்போது பட்டப் பகலில் நீ எனக்கு உன்னைக் கொடுத்தால் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. தலைவி தலைவனிடம் இப்படிக் கூறுகிறாள்.
கொண்கன் – யாழில் புதிய பண் கூட்டும் பாணர் எழுப்பும் விளரி இசை போல் வலம்புரிச் சங்கு ஒலி எழுப்பும் துறைத் தலைவன்.