• Tue. Apr 30th, 2024

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Apr 10, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. இதனையடுத்து ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன் வீதியுலாவாக ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவில் முன்பு வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. பின்னர் இரவு, ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனிப் பொங்கல் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கயிறுகுத்து மற்றும் அக்கினிச்சட்டி திருவிழா, இன்று அதிகாலையில் இருந்து உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

கயிறுகுத்து மற்றும் அக்கினிச்சட்டி திருவிழாவை முன்னிட்டு சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவு ஸ்ரீமாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி “அரிசி கொட்டகை” மண்டபத்தில் எழுந்தருளி காட்சி கொடுப்பார். திருவிழா ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *