ஆஸ்கர் அகடமி விருது விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குநர் ராஜமெளலி, நடிகர்ராம் சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். கடைசியாக நேற்று முன்தினம் ஜூனியர் என்.டி.ஆர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்
இந்நிலையில், அமெரிக்காவில் சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் ராம் சரண், ஹாலிவுட் படத்தில் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “ஹாலிவுட் படத்தில் நான் நடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.நான் எப்போது அந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது குறித்தும் படம் தொடர்பான தகவல் குறித்தும் ஓரிரு மாதங்களில் தெரிவிக்கப்படும். ஜூலியா ராபர்ட்ஸ், டாம் க்ரூஸ் மற்றும் பிராட் பிட் போன்ற ஹாலிவுட் பிரபலங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஆஸ்கர் விருதுக்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைச் செய்யப்பட்டதற்கு நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளோம். இது மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தியாவில் காத்திருக்கும் என் அப்பாவிற்கும் (சிரஞ்சீவி) இது உணர்ச்சிகரமான ஒன்றுதான்.
நான் விருது விழாவில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து விமானநிலையத்திற்கு புறப்படும்போது என் அப்பா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கடந்த42 வருடங்களில் 152 படங்களில் நடித்துள்ள அவர் 1980களில் ஆஸ்கர் விருது விழாவுக்கு இங்கு வந்துள்ளார். அதையே அவர் மிகப்பெரிய சாதனையாக உணர்ந்திருக்கிறார். ஆஸ்கர் என்பது எங்களுக்கு ஒலிம்பிக்தங்க பதக்கத்தைப் போன்றது” என்று தெரிவித்திருக்கிறார்.