இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தை சேர்ந்தவர்களே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இளங்கோவன் போட்டியிட தயங்குவதாகவும் அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு உடல்நிலையும் சரியில்லை. மனநிலை பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருந்தாலும் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் எனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார். காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் 2 நாளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.