ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, போலீஸ் 19-ம் தேதிக்குள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29-ந் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.