• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தயார் நிலையில்!…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பிறகு முதல்கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில், காஞ்சிபுரத்தில் 80%; செங்கல்பட்டு-67%; விழுப்புரம்-81.36%; கள்ளக்குறிச்சி-72%; வேலூர்-67%; ராணிப்பேட்டை-81%; திருப்பத்தூர்-78%; திருநெல்வேலி-69%; தென்காசி-74% என மொத்தம் 74.37% சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் நேற்று காலை 10 மணி முதலே சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இவை நாளை நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி பணி ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் 13 வகையான கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் ஆகியவற்றுடன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டனர். வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு வந்து சேர்ந்தனர்