ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் மற்றும் வார தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (மார்ச் 28), நாளை ( மார்ச் 29), நாளை மறுநாள் ( மார்ச் 30), ரம்ஜான் (மார்ச் 31) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய தேகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று( மார்ச் 28) 460 பேருந்துகளும், நாளை ( மார்ச் 29 )அன்று 530 பேருந்துகளும் என மொத்தம் 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.